Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

‘கப்ல மௌதிஹீ’ – ஒரு விளக்கம்

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)
 
கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது “வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) ‘மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்’.
 
எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க
வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது.
 
பதில் : கேள்வி கேட்டவர் தவறான கருத்துக் கொண்டுள்ளார். அதாவது வேதத்தையுடையவர்களில் எல்லாப் பிரிவினர்களும் மஸீஹின் மரணத்திற்கு முன் அவரிடம் கட்டாயம் நம்பிக்கை கொண்டாக வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் பொருள் என்று அவர் எண்ணிக்கொண்டார்.
 
ஏனெனில் அந்த வசனத்தின் பொருள் கேள்வி கேட்டவர் புரிந்து கொண்டதுதான் என்று நாம் கற்பனையாக ஏற்றுக் கொண்டாலும் அவர் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து இறங்கும் காலம் வரையில், உலகில் இறந்து விட்ட வேததையுடையவர்களும், தற்போது இருப்பவர்களும்,இனிமேல் வருபவர்களும் எல்லோரும் அவர் மீது நம்பிக்கை கொள்பவர்களாக கட்டாயம் இருப்பார்கள் என்றாகிவிடும்.
 
ஆனால் இவ்வாறு எண்ணுவது பொருத்தமற்றது. வேதத்தையுடைய எண்ணற்ற மக்கள் மஸீஹின் நுபுவத்தை மறுத்த நிலையில் இது நாள் வரை நரகத்தை அடைந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் நன்கறிவர். இனிமேலும் அவர்களில் எத்தனை பேர் அவரை மறுப்பதன் காரணமாக அந்த நெருப்பில் நுழைவார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.
 
 
இறந்துபோன வேதத்தையுடையவர்கள் எல்லோரும் அவர் இறங்கும் காலத்தில் அவரிடம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருந்திருப்பின், அவன் அவர்கள் எல்லோரையும் அவர் இறங்கும் காலம் வரையிலும் உயிரோடு வைத்திருப்பான். அனால் வர்கள் இறந்து போனபின் அவர்கள் இனி எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?
 
சிலர் மிகவும் செயற்கையான முறையில் ஒரு பதில் கூறுவார்கள். அதாவது மஸீஹ் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து அவர் மீண்டும் இறங்கும் காலம் வரை மறுக்கும் நிலையில் இறந்து போன வேதத்தையுடைய மக்களை அவர் இறங்கும் பொது ஒரு வேளை இறைவன் மீண்டும் உயிர்பெறச் செய்யலாமே என்பார்கள்.
 
இதற்க்கு பதில் என்னவென்றால் இறைவனால் இயலாதது எதுவும் இல்லைதான்! ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் இந்த எண்ணங்களுக்கான எந்த அறிகுறியாவது திருக்குரானிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ உள்ளதா? உண்டு என்றால் அவற்றை ஏன் இவர்கள் எடுத்து வைப்பதில்லை?
 
சிலர் சிறிது வெட்கத்துடன் தாழ்ந்த குரலில் இதற்க்கு ஒரு விளக்கமளிப்பார். அதாவது வேதக்காரர்கள் என்றால் மஸீஹின் இரண்டாவது வருகையின் போது உலகில் வாழக்கூடிய மக்களாவார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டதும் நம்பிக்கை கொள்வார்கள். மேலும் அவர் இறப்பதற்கு முன் அவர்கள் எல்லாரும் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களின் அணியில் இணைந்து கொள்வார்கள் என்பர்.
 
 
ஆனால் இந்த எண்ணமும் எந்த அளவு தவறு என்றால், முதலாவதாக் மேலே குறிப்பிட்ட அந்த வசனம் மிகத் தெளிவாக பொதுவான மக்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலிருந்து வேதக்காரர்கள் என்ற சொல் ஈஸா நபியின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ உள்ள வேதக்காரர்களையும் குறிக்கும் எனத் தெரிகிறது. அந்த வசனத்தைக் ஒரு குறிப்பிட்ட ஒரு காலவறையோடு தொடர்புபடுத்தக் கூடிய எந்த ஒரு சொல்லும் அந்த வசனத்தில் இல்லை. தவிர எடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொருளும் தவறாகும்.
 
ஏனெனில் மஸீஹை மறுப்போர் வேதக்காரராயினும் வேதக்காரர்களல்லாதவராயினும் அவரின் மூச்சினால், குப்ரின் நிலையிலேயே இறந்துபோவார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸுகள் உரத்த குரலில் கூறுகின்றன, (மஸீஹின் மூச்சால் இறப்பது என்பதன் உண்மையான பொருளை நாம் விளக்கி வந்துள்ளோம். இதன் பொருள்,சான்றுகளின் அடிப்படையில் இறப்பதாகும். ஏதேனும் நஞ்சு நிறைந்த நச்சுப் பொருள் அவரது வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலந்து பலவீனமான காபிர்களைக் கொல்லும் என்றோ ஆயினும் அதனால் தஜ்ஜாலைக் கொல்ல முடியாது என்றோ எண்ணுவது தவறாகும்).
 
திரும்ப திரும்ப அந்த ஹதீஸுகளை நாம் எடுத்து எழுதத் தேவையில்லை. இந்த நூலிலோ அதற்குரிய இடத்தில் காணலாம். இது தவிர தாஜ்ஜாலும் வேதக்காரர்களைச சேர்ந்தவனாவான் என்பது முஸ்லிம்களின் ஒருமித்தக் கருத்தாகும். அவன் அவர் மீது நம்பிக்கைக்கொள்ளமாட்டான் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த எண்ணத்தைப் பின்பற்றுவோர் இந்த ஹதீசுகளைப் படித்து எந்த அளவு வெட்கப்படுவார்கள் என்று என்னால் இப்போது யூகிக்கவே முடியவில்லை.
 
இன்னொன்றும் நம்பப்படுகிறது. முஸ்லிம் ஹதீஸில் உள்ளது. அதாவது மஸீ ஹிற்குப் பின் தீயவர்கள் எஞ்சியிருப்பர். அவர் மேல் கியாமத் (பேரழிவு) நிகழும் என்பதே அது. எந்தக் காபிரும் எஞ்சியிருக்கமாட்டான் என்றால் அது (கியாமத்) எங்கிருந்து வரப்போகிறது?
 
இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. மேற்குறிப்பிட்ட வசனத்தில் அந்தப் பொருள் சரியில்லை என்றால் எந்தப் பொருள்தான் சரியானது? அந்த இடத்திலேயே அதனுடன் தொடர்புடைய எல்லா வசனங்களையும் கவனித்தால் அந்த வசனத்தின் சரியான பொருள் தெரியவரும். அந்தப் பொருள்தான் சரியானது என ஒப்புக் கொள்வதில் தயக்கம் ஏற்படாது.
 
எனவே முதலில் அந்த வசனங்கள் எல்லாவற்றையும் கீழே குறிப்பிடுகிறேன். அதன்பின் அந்த வசனங்களின் அடிப்படியில் நிரூபணமாகும் பொருளையும் குறிப்பிடுகிறேன். அந்த வசனங்களாவன:-
 
‘வ கவ்லிஹீம் இன்னா கத்தல்னல் மஸீஹ…. யக்கூனு அலைஹிம் ஷஹீதா’ (4:158-160) பொருள்: இறைவனின் கருணையையும் நம்பிக்கையையும் யூதர்கள் இழந்துவிட்டதற்க்குக் காரணம்,அவர்கள் செய்த அவர்களின் தீய செயல்களாகும். அவற்றுள் ஒன்று என்னவென்றால்,அவர்கள் கூறினார்கள்:
 
அல்லாஹ்வின் தூதரென்றும் மஸீஹ் என்றும் வாதித்த ஈசப்னு மர்யத்தை நாங்கள் கொன்றுவிட்டோம். (நாங்கள் ஈஸா ரெசூளுல்லாஹ்வை கொன்று விட்டோம் என்று யூதர்கள் கூறினார்களென்றால், அவர்கள் ஹஸ்ரத் மஸீஹை ரெசூல் என்று நம்பினார்கள் என்று பொருளன்று.
 
ஏனெனில் அவர்கள் அவரை உண்மையான ரெஸூல் என்று நம்பியிருந்தால் சிலுவையில் அறைய முற்பட்டிருக்க மாட்டார்கள். எனவே “இதோ இந்த ரெஸூலை நாங்கள் சிலுவையில் அறைந்து கொன்றோம் என்ற அவர்களின் கூற்று, கேலி செய்யும் முறையிலாகும். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவன் சாபத்திற்குரியவன் என்ற தவ்ராத்தின் கூற்றுதான் இந்த கேலி கிண்டலுக்கு அடிப்படைக் காரணம்)
 
யூதர்களின் இந்தக் கூற்றின் நோக்கம் என்னவென்றால் ஈசப்னு மரியம் உண்மையான ரெஸூலாக இருந்திருந்தால் அவரைத் தூக்கிலிட நாங்கள் ஒருநாளும் ஆற்றல் பெற்றிருக்க மாட்டோம். ஏனெனில் சிலுவைக் தண்டனை பெற்றவன் சாபத்திற்குரியவன் ஆவான் என தவ்ராத் உரத்த குரலில் கூறுகிறது என்று காட்டுவதேயாகும்.
 
திருக்குர்ஆன் இந்த வசனங்களுக்குப் பின் கூறுவதாவது, உண்மையில் யூதர்கள் மசீஹிப்னு மர்யமைக் கொல்லவில்லை. சிலுவை தண்டனை வழங்கவுமில்லை. மாறாக இந்த எண்ணம் அவர்களின் உள்ளங்களில் யூகமாகவே உள்ளது. உறுதியானதன்று. மேலும் அவர்களின் மடமையையும் தன் வல்லமையையும் அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ்வே அவர்களைச் சந்தேகத்தில் ஆக்கினான்.
 
அதன்பின் கூறினான்; மஸீஹிற்கு சிலுவை தண்டனை கிடைத்திருக்கலாமோ என்ற ஐயத்தில் இருக்கும் மக்களிடம் அதக்கான எந்தத் திட்டவட்டமான சான்றும் இல்லை. ஒரு யூகத்தையே அவர்கள் பின்பற்றுகின்றனர். மேலும் மஸீஹிற்கு சிலுவை தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கு உறுதியான அறிவு அவர்களிடமில்லை என்பதை அவர்களே நன்கறிவார்கள். மாறாக உண்மையான (உறுதியான) செய்தி என்னவென்றால் அவர் இறந்து விட்டார் என்பதேயாகும். அதாவது அவர் தமது முதியவயதில் இயற்கையாக மரணமடைந்தார்.
 
மேலும் இறைவன் அவரை நல்லடியார்களாகிய மக்களைப் போல் தன்பால் எடுத்துக் கொண்டான், மேலும் இறைவன் மிகைத்தவனாவான்,அவனுக்காக ஆகி விடுகின்றவர்களுக்கு அவன் கண்ணியத்தை வழங்குகின்றான். மேலும் அவன் ‘ஹக்கீம்’ (நுண்ணறிவுள்ளவன்) ஆவான் அவன் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு தன் நுண்ணறிவால் பயனடையச் செய்கிறான்.
 
தொடர்ந்து இறைவன் கூறுவதாவது, வேதக்காரர்களில் ஒவ்வொருவரும் மஸீஹ இயற்கையாக இறந்தார் என்ற உண்மையை நம்புவதற்கு முன்(வேதக்காரர்களின் எண்ணங்களைப் பற்றி) நாம் மேலே குறிப்பிட்ட விதமாக நம்பிக்கைகொண்டவராகவே இருப்பார்.
 
அதாவது மஸீஹ் உண்மையில் சிலுவையில் அறையப்பட்டு மறைந்தார் என்ற விஷயத்தில் எந்த வேதக்காரர்களுக்கும் உள்ளத்தளவில் உருதிகிடையாது. என்று நாம் ஏற்கனவே விளக்கி வந்துள்ளோம். கிறிஸ்தவர்களாயினும் சரி, யூதர்களாயினும் சரி, யூகம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று எண்ணுகின்றனர்.
 
எமது இந்தக் கூற்று உண்மையானது. எவரும் இதனை மறுக்க முடியாது. எனினும் அவரின் மரணம் பற்றி அவர் எப்போது இறந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே அது குறித்து நாம் தெரிவிக்கிறோம். அவர் இறந்துவிட்டார் அவருடைய ஆன்மா கண்ணியத்துடன் நம் பக்கம் உயர்த்தப்பட்டது என இறைவன் கூறுகின்றான்.
 
இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் எண்ணங்கள் தொடர்பாக நாம் வெளிப்படுத்திய விஷயத்தில் நம்பிக்கை வைத்திராத எவரும் அவர்களிடையே இல்லை என்ற இறைவனின் கூற்று அற்புதமான ஒரு கூற்றாகும். இது யூதர்களைப் பார்த்து “நீங்கள் உண்மையாளர்கள் என்றால் மரணத்தை நாடுங்கள்” ((2:95) என்ற வசனத்தைப் போன்ற ஒன்றாகும் இது. எனவே இந்தக் கூற்றின் மூலம், “நாங்கள் உண்மையிலேயே மஸீஹிற்குத் சிலுவை தண்டனை வழங்கினோம்” என்று யூதர்கள் கூறுவதிலிருந்து, அவர் சாபத்திற்குரியவராவார். உண்மையான நபியில்லை (நவூதுபில்லாஹ்) என்ற முடிவுக்கு வருவதே அவர்களின் நோக்கம்.
 
அவ்வாறே மஸீஹ் உண்மையிலேயே சிலுவைதண்டனையால் இறந்தார் என்று கிருஸ்தவர்கள் கூறுவதன் நோக்கம் , மஸீஹ் கிறிஸ்தவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிவிட்டார் என்ற முடிவுக்கு வருவதாகும்.
 
யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய இவ்விரு எண்ணங்களும் தவறாகும். இவ்விரு பிரிவினருள் எவருக்கும் இவ் எண்ணங்களில் திடமான உறுதியில்லை. மாறாக மஸீஹ் உறுதியாகவே சிலுவை தண்டனைக்கு ஆளாகவில்லை என்பதில் மட்டும்தான் அவர்களுக்குத் திடமான உறுதியுள்ளது.
 
யூதர்களும் கிறிஸ்தவர்களும் மவுனம் கொள்வதிலிருந்தும் அவர்களிடம் சந்தேகத்தைத் தவிர ஏதும் இல்லை என்பதை நேர்மையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்தக் கூற்றினால் அல்லாஹ் விளக்க விரும்புகிறான்.
 
மேலும் யூதர்களும் கிறித்தவர்களும் இந்த வசனத்தைக் கேட்டும் மவுனமாக இருந்தனர்;மறுப்பதற்காக களத்தில் இறங்கவில்லை என்றால் அதற்க்குக் காரணம், நாம் இதற்க்கு எதிரில் நம் உள்ளத்தில் இல்லாத ஒரு வாதத்தை விடுத்தால் நாம் பொய்யர் என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய ஏதேனும் அடையாளம் இறைவனிடமிருந்து வெளியாகிவிடும் என்றும் அவர்கள் நன்கு அறிந்ததேயாகும். எனவே அவர்கள் மூச்சு விடவில்லை;மவுனமாக இருந்தனர்.
 
நாம் மவுனம் சாதிப்பதால் நாம் அதனை ஒப்புக் கொண்டுவிட்டோம் என்பது நிரூபணமாகி விடும் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தனர். மேலும் அதனால் ஒருபக்கம் அந்த மறுபபோரின் கொள்கையின் வேர் அறுந்துவிடும். அதே சமயத்தில் இன்னொருபக்கம் மஸீஹ் இறைவனின் உண்மையான தூதரும் நல்லடியாரும் இல்லை; இறைவன் பால் கண்ணியத்துடன் உயர்த்தப்படக் கூடியர்வர்களை சேர்ந்தவரில்லை என்ற தங்களின் கொள்கை பொய்யாகிவிடும் என்பதையும் யூதர்கள் அறிந்திருந்தாலும் முஹம்மது ரெசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உண்மையின் ஒளியின் வாள் அவர்களின் கண்களை கூசச் செய்து விட்டது.
 
திருக்குரானில் அவர்களைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்கள் என்றால்,மரணத்தை நாடுங்கள் என்று கூறியும் அச்சத்தால் எவரும் மரணத்தை நாடாததைப் போன்று அச்சத்தால் நடுங்கிய அவர்களால் மறுக்க முடியவில்லை. அதாவது மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் என்று நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் உறுதி கொள்ளாதவர்களுடன் சேர்க்கின்றீர்கள்? என அவர்கள் வாதிக்கவில்லை. எனவே நபி(ஸல்) அவரளின் காலத்தில் அவர்கள் மவுனம் சாதித்ததே நிரந்தரமான முறையில் அவர்களுக்கு எதிரான சான்றாக அமைந்துவிட்டது.
 
அவர்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனையான கருத்தின் தாக்கத்திற்கு அவர்களின் வழித் தோன்றல்களும் ஆளாகிவிட்டனர். ஏனென்றால் முன்சென்றோர் பின் வருபவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அவர்களின் சாட்சியத்தை வருங்கால வழித்தோன்றல்கள் என்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது.
 
மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளாகவில்லை. மாறாக இயற்கையாக இறந்தார் என்ற பிரச்சனையை இறைவன் எழுப்பினான் என்றால் இந்த வாதத்தின் குறிக்கோள் இதுதான் என்பதைத் தற்போது வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். அதாவது மஸீஹ் சிலுவை தண்டனையால் வெவ்வேறான இரு பிரிவினர்கள்- அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தத்தமது குறிக்கோளுக்குச் சாதகமாக வெவ்வேறான இரு முடிவுகளை எடுத்துக் கொண்டார்கள்.
 
அவர் சிலுவைதண்டனைக்கு ஆளானவர் தவ்ராத்தின்படி சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் சாபத்திற்குறியவர்; இறை நெருக்கத்தை இழந்தவர். ரபாஆ வின் கண்ணியம் இழந்துவிட்டார்;மேலும் நுபுவத்தின் அந்தஸ்து என்பது இந்த இழிநிலைக்கு அப்பாற்பட்டது என்று யூதர்கள் கூறினர்.
 
கிறித்தவர்களோ யூதர்களின் இந்த அவதூறுக்கு, மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானது அவருக்குத் தீயதன்று மாறாக பாவிகளைச் சாபத்திலிருந்து காப்பாற்றவே இந்த சாபத்தைத் தமக்காக மேற்கொண்டாரென்ற பதிலைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டனர்.
 
எனவே இறைவன் அவ்விரு பிரிவினரின் மேற்குறிப்பிட்ட கூற்றுகளையும் அழித்துவிடத் தீர்மானித்தான். மேலும் அவ்விரு பிரிவினருக்கும் மஸீஹின் சிலுவைதண்டனைக்கு ஆளாதல் குறித்து உறுதியில்லை என்றும் உறுதியிருந்தால் முன்வரவேண்டும் என்று வெளிப்படுத்தினான். ஆனால் அவர்கள் ஓடிவிட்டனர். எவரும் மூச்சு விடவில்லை. இது நபிகள் நாயகம் மற்றும் திருக்குரானின் ஓர் அற்புதமாகும். இது தற்கால அறிவற்ற மவுலவிகளின் பார்வைகளிலிருந்து மறைந்துள்ள ஒன்றாகும்.
 
எவன் கையில் ஏன் உயிர் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நான் கூறுகிறேன்; இப்பொழுது இந்த நேரத்திலே மேற் குறிப்பிட்ட உண்மை ஆன்மீகக் காட்சியின் மூலம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எழுதியதெல்லாம் அந்த உண்மையான கற்பிப்போனின் போதனையால்தான் எழுதினேன். இதற்காக எல்லாப் புகழும் இறைவனுக்கே!
 
பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தாலும் இக்கூற்றின் உண்மைக்கு ஒவ்வொரு நேர்மையான உள்ளமும் சான்று பகரும். ஏனெனில் இறைவனின் கூற்று வீண் விஷயங்களைவிட்டும் தூயதாக இருத்தல் வேண்டும். இந்தச் சர்ச்சையின் இடையில் மிகப்பெரும் இந்த நோக்கங்கள் இல்லைஎன்றால் இந்தக் கூற்றுகள் அத்தனையும் எந்த உண்மையும் இல்லாத வெறும் வீணானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவராலும் உணர முடியும். ஏனெனில் அந்நிலையில் ஒரு நபிக்குத் சிலுவைதண்டனை கிடைத்ததா அல்லது இயற்கையான மரணத்தால் இறந்தாரா என்ற இந்த பிரச்சனை, பயனற்ற ஒரு சர்ச்சையாகும். இதனால் எந்தப் பயனும் விளையாது!
 
எனவே எந்த யூதருக்கும் எந்தக் கிறித்தவருக்கும் மஸீஹின் சிலுவைத் தண்டனை குறித்து உறுதியான நம்பிக்கை இல்லை என அல்லாஹ் மிகவும் விளக்கமாக வலுவான ஆற்றலுடன் கூறுவதில் என்னதான் பெரிய நோக்கமிருக்கிறது? என்பதையும் எந்தனை நிரூபிப்பதற்காக யூதர்கள்,கிறிஸ்தவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் பதில் சொல்ல முடியாமல் மவுனமாக்கியதன் பின்னால் இருந்த மாபெரும் குறிக்கோள் என்ன?என்பதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
 
அந்த நோக்கத்தைத் தான் மவுலவிகளின் பார்வையில் காபிராகவும் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனாகவும் இருக்க இவ்வடியானுக்கு அவன் தன் சிறப்பான ஆன்மீகக் காட்சியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றான். (இஸாலேயே அவ்ஹாம், பக்கம் : 288 – 294)