Jamaat Ul Sahih Al Islam Tamilnadu

இமாம்களின் இமாம்

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் இமாம் ஆவார். (முஸ்லிம் விளக்க எண். 278) 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; (பைத்துல் முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர்… அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறை தூதர்களுக்கு நான் தலைமை தாங்கி தொழுகை நடத்தினேன்

நபிமார்களின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என இப்னு கஸீர் கூறுகிறார். பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களும் கூடினர். அப்பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். இது அவர்கள் அனைத்து நபிமார்களின் தன்னிகரற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறார். (17:1 வசனத்தின் தப்ஸீர் இப்னு கஸீரின் விளக்கம்) எல்லா நபிமார்களையும் விட ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலானவர்கள் என்பதையே மிஹ்ராஜ் பயணம் காட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஒவ்வொரு வானத்தையும் கடந்து 7 வானத்தையும் தாண்டி, சித்ரதுல் முன்தஹா வரை சென்று இறைவனுடன் உரையாடி வந்துள்ளார்கள். உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் தத்தமது தகுதிகளுக்கு ஏற்ப 7 வானங்களில்தான் உள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அனைத்து நபிமார்களின் ஆத்மீக பதவி களாகிய 7 வானத்தையும் தாண்டி சித்ரதுல் முன்தஹா சென்றுள்ளார்கள். பூமியில் நின்று ஒருவர் வானத்தைப் பார்த்தால் 7 வானங்களிலும் அனைத்து நபிமார்கள் இருப்பதையும் அவர்களையும் தாண்டி இறுதி எல்லையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இருப்பதையும் காணலாம். இப்பதவி நுபுவத்தின் இறுதிப் பதவியாகும். காத்தம் எனும் சொல்லை அடுத்து நபிமார்கள் எனும் பன்மைச் சொல் வந்தால் – நபிமார்களுள் காத்தம் என்று வந்தால் அரபி மொழி வழக்கிர்கேற்ப அதற்கு நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றே பொருளாகும். அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே காத்த முன்னபியீன் – நபிமார்களில் மிகச் சிறந்தவர் எனக் கூறுகிறான்.

இந்த பட்டம் வேறு எந்த நபிக்கும் தரப் படவில்லை. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வந்த எல்லா நபிமார்களுக்கும் இல்லாத 5 சிறப்புகள் எனக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. (புகாரி , முஸ்லிம், நஸயி)

1) ஒவ்வொரு நபியும் அவர்களின் கூட்டத்தினருக்கு மட்டுமே சொந்தமாக அனுப்பபட்டிருந்தனர். நானோ கறுப்பர், சிவப்பர் ஆகிய (மனித இனம்) முழுமைக்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.

2)போரில் கிடைத்த பொருள்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் அவை எவருக்கும் ஆகுமாக்கப்படவில்லை.

3)எனக்கு பூமி முழுவதும் துப்புரவாகவும், தொழு மிடமாகவும் ஆக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே எவரேனும் தொழுகை நேரத்தை அடைந்து விடின் அவர் எங்கிருப்பினும் சரியே தொழுதுகொள்ளவும்.

4) ஒரு மாதப் பயணத் தூரதிற்குமிடையில் எதிரிகள் இருப்பினும் அவர்கள் எனக்கு அஞ்சி நடுங்கும் அளவுக்கு எனக்கு இறைவன் உதவி நல்கியுள்ளான்.

5)சிபாரிசு செய்யும் முதல் உரிமை (எனக்கு வழங்கப்பட்டுள்ளது)

திருக்குர்ஆன் 17:80 – இல் இதனால் உம்முடைய இறைவன் உம்மை புகழுக்குரிய இடத்திற்கும் (மகாமே மஹ்மூத்) உயர்த்தக் கூடும். இந்தப் பதவி வேறு எந்த நபிக்கும் இறைவன் வழங்கவில்லை. 

திருக்குர்ஆன் 108:2 இல் (நபியே) நிச்சயமாக நாம் உமக்கு (அல்கவ்ஸர்) மிகுதி (யான நன்மை) யினை வழங்கியுள்ளோம். இச்சிறப்பு வேறு எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை. மறுமையில் சொர்க்கத்திற்குப் பரிந்துரைக்கும் முதல் உரிமை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. (முஸ்லிம் ஹதீஸ் எண். 330) 

இறைத்தூதர்களில் மிகுதியான மக்கள் பின் பற்றபப்டுவதும் நானே. (முஸ்லிம் ஹதீஸ் எண் 330)

என் அடியார்களே! (குல் யா இபாதி) என்று அழைப்பதற்குரிய தனது உரிமையை அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். (39:54) 

வேதங்கள் பெற்ற நபிமார்களுள் முழு மனித இனத்திற்கும், கியாமத் வரை முழுமையான இறுதியான வேதம் பெற்றவர் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே.

நபி (ஸல்) அவர்கள் நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன் என்று கூறியுள்ளார். ( புகாரி 3340) 

ஆதம் நபி (அலை), நூஹ் (அலை), இப்ராஹீம் நபி (அலை), மூஸா நபி (அலை), ஈஸா நபி (அலை) ஆகியோரிடம் சென்று மக்கள் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டி, (அவர்களுக்கு) பரிந்துரை கிடைக்கவில்லை. இறுதியில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்காக வருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதி பரிந்துரை செய்ய இறைவனும் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான். (அல் ஹதீஸ் 2 ஆம் பாகம் பக்கம் 630-631)

(கப்ருகளிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான்தான் மனிதர்களில் முதல்வனாக வெளிப்படுவேன். அவர்கள் இறைவன்பால் செல்லும்போது நான் தான் அவர்களுக்கு முன்னோடியாக இருப்பேன். அன்றி அவர்கள் நம்பிக்கை இழக்கும் போது நான் அவர்களுக்கு நன்மாராயம் (நற்செய்தி) கூறுவேன். அன்று என் கையில் புகழின் கொடி இருக்கும். என் இறைவனிடம் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவன் நான்தான். (ஆதாரம்: திர்மிதி, அறிவிப்பாளர் : அனஸ் (ரலி))

மறுமை நாளில் நான் நபிமார்களுக்கெல்லாம் தலைவனாகவும் அவர்களின் பேச்சாளனாகவும் இருப்பேன். (ஆதாரம்:திர்மிதி) மறுமை நாளில் நான் சுவனபதியின் வாசலை அடைந்த அதனைத் திறக்குமாறு கோருவேன். அப்போது அதன் காவலர், நீர் யார் என்று என்னை வினவுவார். அதற்கு நான் முஹம்மது (ஸல்) என்பேன். அப்போது அவர் தங்களுக்கு முன்னர் எவருக்கும் வாசலைத் திறக்க வேண்டாம் என்றும், தங்களுக்கே அதனைத் திறக்க வேண்டும் என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனக் கூறுவார் என அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (அறிவிப்பாளர் ; அனஸ் (ரலி) ஆதாரம் : முஸ்லிம் ) 

அனைத்துலகுக்கும் அருட்கொடை (21:108) யாக வந்த ஒரே ஒரு நபி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே ஆவார்கள்.